Tuesday, April 23, 2019

பறவைகளுக்கு உணவளித்து பாதுகாக்கும் பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளியில், பறவைகளுக்கு தானியம் மற்றும் தண்ணீர் வழங்கி பாதுகாக்கும் மாணவர்கள், தங்களது வீடுகளிலும், பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த
சாக்கலப்பள்ளி பகுதியில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. 326 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.மலை கிராம மக்களுக்கு, ஆரம்ப கல்வி வழங்கி வரும் இப்பள்ளி, கல்வியுடன் சேர்த்து, மனித நேயத்தையும், மாணவர்கள் மத்தியில் விதைத்து வருகிறது. இப்பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் அறிவுரையுடன், கடந்த ஆண்டு, தங்களது வீடுகளில் தேங்காய் ஓடு, சிறிய அளவிலான மண்பானை போன்றவற்றை, பறவைகளுக்கு உணவு வழங்கவும், தண்ணீர் குடிக்கவும், ஏற்ற பொருளாக மாற்றியுள்ளனர். 

அதை, தங்களது வீடு மற்றும் அருகில் உள்ள மரங்களில் கட்டி, தினமும் தண்ணீர் மற்றும் தானியங்களை போட்டு வருகின்றனர். அடுத்த முயற்சியாக, பள்ளியில் இப்பணி துவங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, பள்ளியிலும், தேங்காய் ஓடு மற்றும் மண்பானை போன்றவற்றில், பறவைகளுக்கு தேவையான தானியங்கள் மற்றும் தண்ணீரை, மாணவர்கள் ஊற்றி வருகின்றனர். 

மலை கிராமங்களில் சாதாரணமாக கிடைக்கும் மூங்கிலையும், தானியங்கள் மற்றும் தண்ணீர் ஊற்றும் வகையில் தயார் செய்து, பள்ளி சுற்றுச்சுவர், பள்ளியின் மொட்டை மாடி, மரம் போன்றவற்றில், மாணவர்கள் கட்டி வைத்துள்ளனர்.இதனால், பள்ளிக்கு வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்கள் இதுவரை பார்க்காத பறவைகளை கூட, தற்போது பார்த்து வருவதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்தியசீலன் கூறினார்.

No comments:

Post a Comment