Wednesday, January 23, 2019

வகுப்பில் ரகளை: 6 மாணவர், 'சஸ்பெண்ட்'

அரசு உதவி பெறும் பள்ளியில் ரகளையில் ஈடுபட்ட, ஆறு மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.வேலுார் மாவட்டம், திருப்பத்துாரில் உள்ள, ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில், சில மாதங்களுக்கு முன்,
மாணவர்கள் சிலர், மொபைல் போனில் ஆபாச படம் பார்த்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் ரோந்து வந்த தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்தார். இதனால், சில மாணவர்கள், அவரை கத்தியால் குத்தினர். இந்த சம்பவம் ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியது.இந்நிலையில், அதே பள்ளியில், மற்றொரு சம்பவம் நடந்தது. பிளஸ் 2 வகுப்பில், பொருளியல் ஆசிரியர் பாடம் எடுக்க முயற்சித்த போது, அவரை மாணவர்கள் கிண்டல் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து, நமது நாளிதழில், சமீபத்தில், விரிவான செய்தி வெளியானது.உடன், பள்ளி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், வகுப்பறையில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தெரியவந்தது. மேலும், ஆசிரியர்களை தொடர்ந்து சீண்டியதாகவும், பள்ளி வளாகத்தில் ரகளை செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.இதையடுத்து, பிளஸ் 2 மாணவர்கள் ஆறு பேரை, 'சஸ்பெண்ட்' செய்து, பள்ளியின் செயலர் உத்தரவிட்டுள்ளார். வரும் காலங்களில், மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளாமல் இருக்க, அவர்களுக்கும், பெற்றோருக்கும் கவுன்சிலிங் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment