Thursday, May 16, 2019

தபால் வாக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு தபால் வாக்கு
அளிக்க விநியோகிக்கப்பட்ட படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் (மே 17) தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரான சாந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தத் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற அவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.


இந்த விண்ணப்பப் படிவங்கள் முறையாக வழங்கப்படவில்லை. தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும். ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விடக்கூடாது என தேர்தல் ஆணையத்தின் விதிகள் கூறுகின்றன.
இந்த நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்களின் தபால் வாக்களிக்கும் விண்ணப்ப படிவங்கள், சாதாரண காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த 90 ஆயிரம் பேர் முழுமையாக தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனர் என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. ஆங்கில நாளிதழ் ஒன்றில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒரு லட்சம் அரசு பணியாளர்கள் தங்களது வாக்கைச் செலுத்தவில்லை என செய்தி வெளியிட்டிருந்தது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் படிவங்கள் கிடைக்காததும், சிறு காரணங்களுக்காக படிவங்கள் நிராகரிக்கப்பட்டதுமே இதற்கு காரணமாக இருக்கக்கூடும். தபால் வாக்கு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளது. எனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வாக்களிக்கத் தவறிய அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்களை முறையாக வழங்கி, அந்த வாக்குகளையும் சேர்த்து எண்ண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க விநியோகிக்கப்பட்ட படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (மே 17) ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment